திருச்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை…மத்திய பாஜக அரசிடம் காங்கிரஸ் கோரிக்கை!

ஆறாவது சித்த மருத்துவ தின விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள் என்கிற மையப்பொருளில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் முன்ஜீப்பாரா மஹேந்திரபாய், திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திருநாவுக்கரசர், “சித்தா தினத்தை மத்திய அரசு தேசிய சித்தா தினமாக கொண்டாட வேண்டும், மத்திய அரசின் நிறுவனங்களில் சித்தா மருத்துவ துறையை உருவாக்கி சித்த மருத்துவம் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும்,

சித்த மருத்துவ முறைகளை இந்தி உட்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். எய்ம்ஸ் சித்தா கல்லூரியை திருச்சியில் தொடங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர் முன் வைத்தார். தமது கோரிக்கைளை அவரிடம் மனுவாகவும் அளித்தார்.

தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் முன்ஜீப்பாரா பேசும்போது, “அனைவருக்கும் சித்தா தின வாழ்த்துகள். உணவின் முக்கியத்துவம் பல தமிழ் இலக்கியங்களிலும் சித்த இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல்நலத்தை பாதுகாப்பது குறித்து பல வழிக்காட்டுதல்கள் சித்த மருத்துவ முறையில் உள்ளன. பல தொற்றா நோய்களுக்கு சித்த மருத்துவ முறை சிறந்ததாக உள்ளதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சித்தா உள்ளிட்ட மருத்துவ் முறைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஆயுஷ் துறை சிறப்பு கவனம் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள தேசிய சித்தா நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்தாண்டு முதல் அந்த நிறுவனத்தில் இளங்கலை சித்தா படிப்பு தொடங்கப்பட உள்ளது” என்று அமைச்சர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.