திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெத்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி குப்பன். இவர் மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.
இதையடுத்து கஸ்தூரியின் தாய் கல்யாணி அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் மகன் குமார் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே குப்பனுக்கும், கஸ்தூரிக்கும் அடிக்கடி குடும்பச்சண்டை இருந்து வந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த குப்பன் கஸ்தூரியிடம் தினமும் தகராறு செய்து வந்தார். வழக்கம் போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பச்சண்டை காரணமாக கஸ்தூரி கணவரிடம் கோபித்து கொண்டு அம்மாவீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில், நேற்று தனது மாமியார் கல்யாணி வீட்டிற்குச் சென்ற குப்பன், தனது மனைவி கஸ்தூரி வீட்டிற்கு வராதது குறித்தும், அடிக்கடி தன்னிடம் சண்டை போட்டு விட்டு செல்வது குறித்தும் மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியதில், ஆத்திரமடைந்த குப்பன், கஸ்தூரியை கத்தியால் குத்த முயன்றார். இதை தடுத்து நிறுத்த முயன்ற மாமியார் கல்யாணியின் முதுகு மற்றும் இடது கையில் குப்பன் கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் பலத்த காயம் அடைந்த கல்யாணி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து குப்பன், கத்தியுடன் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.