ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பெருமாள்மலையை சேர்ந்தவர்கள் கருப்பண்ணன் – மல்லிகா தம்பதியினர். இவர்களின் மகள் தீபா. இவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி கூலித்தொழிலாளி குப்பம்மாளுடன் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளேன் என்று தெரிவித்து, அவர்களுக்கு மாத்திரை சாப்பிடுவதற்கு கொடுத்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் நான்கு பேரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கினர்.
இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சென்னிமலை அம்மாபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவருக்கும் கருப்பண்ணனுக்கும் நிலம் குத்தகைத் தொடர்பான பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது தெரிய வந்தது.
இதில், கருப்பண்ணன், கல்யாண சுந்தரத்திற்கு ரூ.14 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை திரும்ப கேட்டு கருப்பண்ணன் நெருக்கடி கொடுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த கல்யாண சுந்தரம் கருப்பண்ணனை கொலை செய்யும் நோக்கத்தில் தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் விஷ மாத்திரைகளை கல்லூரி மாணவர் போத்தீஸ் குமார் என்பவர் மூலம் கொடுத்து அணுப்பியது விசாரணையில் அம்பலமானது.இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார். அதில் முக்கிய குற்றவாளியான விவசாயி கல்யாண சுந்தரத்திற்கு முப்பத்தைந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
இதேபோன்று, மற்றொரு குற்றவாளியான கல்லூரி மாணவர் போத்தீஸ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதன் படி, கல்யாணசுந்தரம் மற்றும் போத்தீஸ்குமார் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.