சென்னை மதுரவாயலில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன் பங்கேற்றார். அப்போது பெரியார் குறித்து கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திராவிடர் கழகம் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் பாண்டிச்சேரியில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
புழல் சிறையில் இருந்து இந்து முன்னணி பிரமுகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்து முன்னணி நிர்வாகிகள் மாலை அணிவித்து கனல் கண்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனல் கண்ணன் இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்துக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன், போராடுவேன் என உறுதியாக தெரிவித்தார். மேலும் அரசியல் சார்பான பிற கேள்விகளுக்கு பதில் அளிக்க கனல் கண்ணன் மறுத்துவிட்டார்.
இதற்கிடையே, கனல் கண்ணனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி 4 வாரங்களுக்கு காலை, மாலையில் இருவேளை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.
இந்நிலையில், கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.