திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் காணாமல் போன பள்ளி மாணவியை மீட்டு தர கோரி பொது மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. செம்பட்டி அடுத்த நடுப்பட்டி அருகே ஈச்சம்பட்டி சேர்ந்தவர் விவசாயி பரமசிவம். பரமசிவம் பாண்டிச்சேரி தம்பதியின் மகள் ஜனனி வயது 14. இவர் சின்னாளப்பட்டியில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜனனி என்ற மாணவி காணவில்லை, இதுகுறித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடியும் ஜனனியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இது குறித்து செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர், போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த 4 நாட்கள் பிறகு இன்று ஜனனி தயார் மற்றும் ஊர் மக்களும் செம்பட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தனது மகள் ஜனனி போலீசார் கண்டுபிடித்து கொடுக்கவில்லை, கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் அலட்சியமாக பதில் கூறுவதாக கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தர்ணா போராட்டத்தின் ஈடுபட்டுள்ள அப்பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமபொதுமக்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் காவல் நிலையத்தின் நுழைவாயிலை முடி உள்ளே சென்று விட்டனர்.இதனால் தொடர்ந்து இப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.