இயற்கை முறையில் பொங்கல் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க அரசுக்கு கோரிக்கை!

கடைமடை பகுதியான  புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலத்தில் நெற்பயிர்கள் மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.  பேரிடர் பாதிப்பு மற்றும் போதிய விளைச்சல் இல்லாததால் பொங்கல் கரும்பு உள்ளிட்ட மாற்றுப் பயிர்களைப்  பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை.

கரும்பு சாகுபடி

மேலும் உப்பு காற்று காரணமாக கரும்பின் வளர்ச்சி குறைவாக உள்ளதாலும், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாலும்,  பொங்கல் கரும்பு பயிரிட  பெரும்பான்மையான விவசாயிகள் விரும்புவதில்லை. இதனால் பொங்கல் பண்டிகைக்கு பெரும்பாலும் அருகேயுள்ள மாவட்டங்களிலிருந்து  கரும்பு இறக்குமதி செய்யப்பட்டன.

இந்நிலையில்  காரைக்கால் மாவட்டம், சேத்தூர் பகுதியில் சந்திரசேகரன் என்ற விவசாயி கரும்பின் மீதுள்ள ஈர்ப்பால் கடந்த 12 வருடங்களாக கரும்பு சாகுபடி செய்து வருகிறார். இந்த வருடம் இயற்கை முறையில் இரண்டு ஏக்கரில் இயற்கை உரங்கள் மற்றும் ஆட்டுப் புழுக்கை சாணம் போன்றவற்றைப் பயன்படுத்தி கரும்பு வளர்த்துள்ளார். 

கரும்பு சாகுபடி

இதன் காரணமாக இதுவரை இம்மாவட்டத்தில்  இல்லாத அளவுக்கு கரும்பு சராசரியாக 10  அடி  உயரம்வரை வளர்ந்துள்ளது. மேலும் கரும்பும் பெரும் சுவைமிக்கதாக இருப்பதால் இவரது கரும்புக்கு தற்போது பெரும் டிமாண்டு ஏற்பட்டுள்ளது. 

கரும்பு விவசாயி சந்திரசேகரனிடம் பேசியபோது, “பாரம்பரிய முறையில் கரும்பு பயிரிட தேவையான இடுபொருட்கள், விதைகள் மானிய விலையில் அரசு வழங்க வேண்டும். பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டால் அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.