
ஐந்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் அஞ்சலி
கடந்த 15 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் தாக்குப்பிடித்து நிற்கும் வெகு சில கதாநாயகிகளில் நடிகை அஞ்சலியும் ஒருவர். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அஞ்சலி கடந்தாண்டு பால்ஸ் என்கிற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் படத்திலும் கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் அஞ்சலி. ஏற்கனவே மலையாளத்தில் 2010ல் பையன்ஸ், 2018 இல் ரோசாப்பூ என இரண்டு படங்களில் நடித்துள்ள அஞ்சலி தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாள திரை உலகில் ரீ என்ட்ரி கொடுத்து இரட்ட என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
மலையாள சினிமாவில் குணச்சித்திர நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்துள்ள ஜோசப் பட புகழ் ஜோஜூ ஜார்ஜ் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாகத்தான் அஞ்சலி நடிக்கிறார். இந்த படத்தை ரோகித் எம்ஜி கிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் அஞ்சலியின் கதாபாத்திர பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.