பொங்கல் பண்டிகை என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டு, கோழி சண்டை தான். ஆனால் இவற்றை உரிய அனுமதி இல்லாமல் நடத்தினால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
அந்தவகையில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சேவல் சண்டையின் போது சூதாட்டம் நடத்தப்படமாட்டாது, சேவல்கள் துன்புறுத்தப்படமாட்டாது என்று உறுதி அளித்தால் மட்டுமே இந்த சேவல் சண்டைக்கு அனுமதி கேட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரசு தரப்பில் தெரிவித்த அனைத்து நிபந்தனைகளுக்கும் உருது அளித்ததால் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சேவல் சண்டையின் போது குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.
இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.