மீண்டுமொரு லாக்கப் டெத்தா? சீர்திருத்த பள்ளியில் இறந்த சிறுவன் வழக்கில் 6 காவலர்கள் கைது!

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவன் வழக்கில் திடீர் திருப்பமாக காவலர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள கன்னடபாளையம் குப்பை மேடு பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவருடைய கணவர் பழனி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவருக்கு 3 பெண் பிள்ளையும், மூன்று ஆண் பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் ( சீர்திருத்தப்பள்ளி) 6 மாதம் கைதியாக இருந்து வந்துள்ளார் . 17 வயது சிறுவனான கோகுல் ஸ்ரீ கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
image
இந்த நிலையில் தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் எல்லைக்கு உட்பட்ட தாம்பரம் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே இருக்கும் பேட்டரிகளை திருடிய வழக்கு சம்பந்தமாக கடந்த 29ஆம் தேதி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் டிசம்பர் 30 தேதி மாலை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி விட்டு செங்கல்பட்டு சிறப்பு இல்லத்தில் பிரியாவின் மூத்த மகனை அடைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மாலை 5 மணி அளவில் பிரியாவிற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட சிறப்பு இல்ல காவலர்கள், உங்களின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்த காவலர்கள் மிக மோசமான நிலையில் மகன் இருப்பதாகும் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போலீசார் மகன் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
image
இதனையடுத்து, தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தாய் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் நீதிமன்ற காவலில் இருந்த சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக செங்கல்பட்டு நகர போலீசார் 176(1)(A) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சிறுவனின் உடல்கூறாய்வு, நீதிபதி ரீனா முன்னிலையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நீதிபதி சம்பந்தப்பட்ட சாட்சியங்களிடம் 10 நாட்களுக்கு மேலாக தீவிர விசாரணையை மேற்கொண்டார். மேலும் பிரியாவின் புகாரை பெற்றுக் கொண்டு அதன் அடிப்படையிலும் விசாரணையை மேற்கொண்டார்.
image
விசாரணையில் குறிப்பிட்ட ஒரே ஆயுதத்தைக் கொண்டு தாக்கியதின் விளைவாகவே, இந்த உயிரிழப்பு நடைபெற்றது என தெரியவந்தது. இதனையடுத்து இதுகுறித்த விசாரணை அறிக்கையை செங்கல்பட்டு நகர போலீசாருக்கு ஒப்படைத்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு நகர போலீசார் நீதிபதியின் அறிக்கையின் அடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்டதில் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்தனர். சிறுவர் கூர்நோக்கு கண்காணிப்பாளர் மோகன், பணியில் இருந்த காவலர்கள்
சந்திரபாபு ,வித்யாசாகர், சரண்ராஜ், ஆனஸ்ட் ராஜ், விஜயகுமார் ஆகிய ஆறு பேரை கைது செய்து டிஎஸ்பி பரத் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை அடிப்படையில் ஆறு பேரும் நீதிபதி முன் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். காவலர்களே சிறுவனை அடித்து கொலை செய்திருக்கும் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.