"எனக்கும் ஆல்யா மானஸாவுக்கும் 10 வயசு வித்தியாசம்; அதை விட்டுட்டு கதைக்குள்ள வரணும்!"- `இனியா' ரிஷி

`டீலா… நோ டீலா…’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரிஷி. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரை முன்னால் இவரைப் பார்க்க முடியாமல் இருந்தது. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `இனியா’ தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் கதாநாயகனாக நுழைந்திருக்கிறார். பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தவரை ஷூட்டிங் இடைவெளியில் நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

ரிஷி

“பலரும் என் தமிழ் உச்சரிப்பு நல்லாயிருக்குன்னு சொல்லுவாங்க. அதுக்கு என்னோட வளர்ப்புதான் காரணம். அம்மா, அப்பாவைப் பொறுத்தவரைக்கும் எந்த மொழியில் பேசினாலும் தெளிவாகவும் திருத்தமாகவும் பேசணும். என்னுடைய தாத்தாவை தமிழ் வெறியன்னே சொல்லலாம். ஈ.வெ.ரா ஐயாவுடன் இணைந்து அவருடைய இளமைக் காலத்தில் வேலை செய்திருக்கிறார்”, என்றவரிடம் `நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் கெஸ்ட் ரோல் குறித்துக் கேட்டோம்.

“அந்தத் தொடரில் நடித்ததுக்கு ஜீ தமிழ் சீரியல் ஹெட் ரமணன் சாருக்குத்தான் நன்றி சொல்லணும். 19, 20 வயசிலிருந்தே நாடகங்களிலெல்லாம் நடிச்சதனால சீரியலில் நடிக்க எனக்கு எளிமையாகத்தான் இருந்துச்சு. பல வருஷமா ரமணன் சாருடன் நல்ல நட்பு இருந்துச்சு. கடந்த மே மாதம் சின்னத்திரைக்குள் நுழையலாம்னு முடிவு செய்ததும் முதலில் ரமணன் சார்தான் நினைவுக்கு வந்தார். அவர்கிட்ட சொன்னதும், ‘நீ நடிக்கிறதுக்கு ரெடியா இருக்கேன்னே எங்களுக்குத் தெரியாம போச்சு. ஜீ தமிழில் ‘நினைத்தாலே இனிக்கும்’னு ஒரு சீரியல். ஆடியன்ஸ் மத்தியில் அந்த சீரியல் நல்ல ரீச். அது பெங்காலி சீரியலுடைய ரீமேக். அதுல ருத்ரான்னு ஒரு போலீஸ் கேரக்டர் ரோல் நல்ல ரீச் ஆச்சு. அந்த ரோலைத் தமிழில் சேதுபதிங்கிற பெயரில் ரீமேக் பண்றோம். அதுல நீ நடிக்கிறியா?’ன்னு கேட்டார். சரின்னு சொல்லவும் மறுநாளே ஷூட்டிங்கிற்கு வரச் சொல்லிட்டார். மறுபடி டிவிக்குள் நுழைந்து `உள்ளேன் ஐயா!’ன்னு என்னை நான் காட்டிக்க அந்தத் தொடர் எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு” என்றவர் ‘இனியா’ தொடர் பற்றிப் பேசினார்.

ரிஷி

“ஆரம்பத்தில் நெகட்டிவ் கேரக்டர்னு சொல்லிட்டாங்க. நாம என்னப் பண்ணப் போறோம் என்கிற தெளிவு முதல்ல வேணும். இந்தக் கேரக்டர் ஆணாதிக்கம் நிறைந்த கேரக்டர்னு முடிவு பண்ணியாச்சு. எந்த அளவுக்கான ஆணாதிக்கம்னு ரைட்டர்ஸ் தெளிவா அதோட நுணுக்கங்களைப் புரிஞ்சுகிட்டு எழுதிட்டாங்க. அதனால அது எனக்கு சுலபமாகிடுச்சு. டைரக்டர், சினிமாட்டோகிராபர், கோ ஆர்ட்டிஸ்ட்னு எல்லாரும் கொடுக்கிற டீம் ஒர்க்னால இன்னைக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிட்டு இருக்கு. ‘இனியா’ சீரியலுக்காக இதுவரைக்கும் எனக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸூக்கு எல்லாருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.

சீரியலுடைய ஆரம்ப எபிசோட்டில் என் அம்மா கொடுத்த பொங்கலில் கல் இருக்கும். நான் கோபத்துல நிறைய கல்லை பொங்கலில் கொட்டி அவங்களைச் சாப்பிட சொல்ற மாதிரியான காட்சி வரும். அந்த சீன்ல இருந்தே எனக்கு பயங்கர நெகட்டிவ் ஆக இருந்தது. எனக்குன்னா எனக்கு இல்ல… என் கேரக்டருக்கு!” என்றவர் ‘இனியா’ சீரியல் குறித்து வரும் ட்ரோல்கள் குறித்தும் பேசினார்.

“நான் ஆல்யா மானஸாவை விடவும் 10 வயசு பெரியவன். அவங்க ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா. இதையெல்லாம் மக்கள் சீக்கிரம் பேசி முடிச்சிட்டாங்கன்னா நல்லது. ஏன்னா, அப்பதான் அவங்களுடைய கவனம் கதை மேல வரும்!” என்றார்.

ரிஷி

இன்னும் பல விஷயங்கள் குறித்து ரிஷி நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்! 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.