ஆப்கனில் முன்னாள் பெண் எம்.பி சுட்டுக் கொலை

காபூல்: ஆப்கானிஸ்தானில் முன்னாள் பெண் எம்.பி ஒருவர் தனது வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முன்னாள் எம்.பி முர்சால் நபிஜாதாவின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அவரையும், அவரது பாதுகாவலரையும் சுட்டுக் கொன்றது. இந்தத் தாக்குதலில் நபிஜாதாவின் சகோதரர் பலத்த காயத்துக்குள்ளானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொலை குறித்து விசாரணை நடந்து வருவதாக தலிபான்கள் அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலிபான்கள் பதவியேற்று முன்னாள் அரசின் எம்.பி ஒருவர் கொலைச் செய்யப்படுவது இதுவே முதல் முறை.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், தொடர்ந்து பெண்களின் உரிமையைப் பறிக்கும் செயல்களிலே தலிபான்கள் ஈடுபட்டு வருவது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.