
சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால் கடந்த டிச.,8ல் இருந்து தற்போது வரை, 60 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் கடந்த டிசம்பர் 8 முதல் தற்போது வரை, 54 ஆயிரத்து 435 பேர் கொரோனா மற்றும் அது தொடர்பான இணை நோய்களால் இறந்துள்ளனர். இந்த இறப்புகள் அனைத்தும் மருத்துவமனைகளில் நிகழ்ந்தவை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே இறந்தவர்கள் குறித்து எந்த கணக்கும் சேர்க்கப்படவில்லை என, அந்நாட்டின் சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சீனா தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளை டிசம்பர் தொடக்கத்தில் தளர்த்தியது. இதனால், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் குவிந்தனர். மேலும், மயானங்களில் உடலை தகனம் செய்ய இடமில்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கொரோனா சம்பந்தமான தகவல்களை வெளியிடுவதை திடீரென சீனா நிறுத்தியது.
சீனாவில் லட்சக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலின்படி, உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற அமைப்புகள், சீனாவிடம் தகவல்களை கோரின.
இந்நிலையில், உச்சபட்சமாக டிச., 23 அன்று மருத்துவமனைகளுக்குச் சென்ற நோயாளிகளின் எண்ணிக்கை 30 லட்சம் வரை இருந்தது. ஜனவரி 13 நிலவரப்படி அந்த எண்ணிக்கை குறைந்து, 4.77 லட்சம் பேர் மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளனர்.
சமீபத்தில், கொரோனா சம்பந்தமான கூடுதல் தகவல்களை பகிர்வதன் அவசியம் குறித்து, உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள், சீன அதிகாரிகளை சந்தித்து பேசியதாக, அதன் பொது இயக்குநர் டெட்ரஸ் அதானம் தெரிவித்துள்ளார்.
newstm.in