எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு, எடப்பாடி கே.பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “அ.தி.மு.க என்ற மாபெரும் பேரியக்கத்தை எம்.ஜி.ஆர் தொடங்கி, அதன் தலைவராக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக நல்லாட்சியை வழங்கினார்.

சங்க இலக்கிய காலத்தில் இருந்த கடையெழு வள்ளல்களைத் தொடர்ந்து, வாரி வாரி வழங்கிய எட்டாவது வள்ளலாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்றவாறு பஞ்சப்படி கொடுக்கப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டது. அப்போது தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதி இதை மாநில அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த மறுத்தார்.
பிறகு ஆட்சிக்குவந்த எம்.ஜி.ஆர்., மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்குச் சமமான பஞ்சப்படி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கொடுக்கும் பொருட்டு, ஊதியக்குழு ஒன்றை அமைத்து அதை அமல்படுத்தி, அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

இன்றைய தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் தமிழ்நாடு மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, மக்களை ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் ஆட்சிக்கு வந்தது. இந்த மக்கள் விரோத தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்ப எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் வீரசபதம் ஏற்போம். மேலும், களப்பணியாற்றி மீண்டும் அ.தி.மு.க-வின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்குவோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.