SHOCKING..! – 71 வயது முதியவரை பைக்கில் தரதரவென இழுத்து சென்ற இளைஞர்

கர்நாடக மாநிலத்தில், 71 வயது முதியவர் ஒருவரை, இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில், இன்று, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது காரில் இருந்து இறங்கிய ஓட்டுனர், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் இது குறித்து வாக்குவாதம் செய்தார். இதை அலட்சியப்படுத்திய அந்த இளைஞர், இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

அப்போது அவரை பிடிக்கும் நோக்கில், இருசக்கர வாகனத்தின் பின்பகுதியை கார் ஓட்டுனர் பிடித்தார். இது குறித்து தெரிந்தும் கூட, இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர் வாகனத்தை நிறுத்தாமல், கார் ஓட்டுனரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்றார்.

இறுதியாக இருசக்கர வாகனத்தை அந்த இளைஞர் நிறுத்தினார். இந்த சம்பவத்தில் கார் ஓட்டுனரின் ஆடைகள் கிழிந்தன. மேலும் காயங்களும் ஏற்பட்டன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசாரணையில், இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபர் 25 வயதாகும் சாஹில் என்பதும், கார் ஓட்டுனர் 71 வயது முதியவர் முத்தப்பா என்பதும் தெரிய வந்தது. முத்தப்பாவின் கார் மீது விபத்தை ஏற்படுத்தி விட்டு சாஹில் இருசக்கர வாகனத்தில் நிற்காமல் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெங்களூரு போலீசார், சாஹிலை கைது செய்தனர். காயம் அடைந்த முத்தப்பாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கார் மீது இருசக்கர வாகனத்தில் மோதிய இளம் பெண் ஒருவர், சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.