சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்றும் இளைய மகனுக்கு வாய்ப்பு தருமாறு தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், “ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய திமுகவிற்கு, முதல்வருக்கு காங்கிரஸ்காரன் என்ற முறையில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணி கட்சிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். திமுக தேர்தல் பிரச்சாத்தை தொடங்கி உள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஓரிரு நாளில் காங்கிரஸ் வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. இளைஞர்கள் வர வேண்டும். எனது குடும்பத்தில் இருந்து வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கட்சி கூறினால் இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
வேறு சிலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். அதிமுக நான்காக பிரிந்து உள்ளது. ஒற்றுமை அவர்களிடம் இல்லை. அதிமுக சேர்ந்து வந்தாலும், பிரிந்து வந்தாலும் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெரும்.” இவ்வாறு அவர் கூறினார்.