குடிபோதையில் தகராறு செய்த கணவர்.! கல்லால் அடித்துக்கொன்ற மனைவி.!

தென்காசி மாவட்டத்தில் குடிபோதையில் தகராறு செய்த கணவரை கல்லால் அடித்துக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பாலசுப்பிரமணியன் (48). இவரது மனைவி திரவியக்கனி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை இவர்களது வீட்டு வாசலில் இருந்து சற்று தொலைவில் பாலசுப்ரமணியன் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சடைந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பாலசுப்பிரமணியன் உடலுக்கு அருகே ரத்த கரையுடன் கல் ஒன்று கிடந்துள்ளது. இதனால் பாலசுப்பிரமணியனை கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாலசுப்பிரமணியனின் மனைவியிடம் இது தொடர்பாக விசாரித்தனர்.

இந்த விசாரணையில், பாலசுப்பிரமணியனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதேபோல் நேற்று இரவும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி திரவியக்கனி, கல்லால் பாலசுப்பிரமணியனின் முகத்தில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பாலசுப்பிரமணியன் உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கணவனை கல்லால் அடித்துக் கொன்ற மனைவியை கைது செய்தனர்.மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.