புதுடெல்லி: காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி தருவதாக ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் நயீம் அகமது கான் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
அகமது கான், ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையத் சலாஹுதீன் உட்பட பலர் அரசுக்கு எதிராக சதி செய்வதாகவும், காஷ்மீரில் வன்முறையை தூண்டுவதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ள என்.ஐ.ஏ 12,000 பக்கத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில் நயீம் அகமது கான் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நயீம் அகமது கான் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் சித்தார்த் மிரிதுல் மற்றும் நீதிபதி தல்வந்த் சிங் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது என்ஐஏ பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.