ஈரோடு கிழக்கு – போட்டியிலிருந்து விலகும் ஓபிஎஸ்? எடப்பாடிக்கு மேலும் நெருக்கடி!

ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் மீண்டும்
எடப்பாடி பழனிசாமி
அணியில் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் நேற்று செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேசமயம் இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணையும் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

“ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளரை பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்யுங்கள். பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரையும் அனுமதிக்க வேண்டும். அவைத் தலைவர் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும். பொதுக்குழு முடிவு செய்யும் வேட்பாளரை அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.அவைத் தலைவரின் பரிந்துரை மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்” என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கே மிகப் பெரும்பாலான ஆதரவு இருக்கிறது எனும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தனது வேட்பாளரை வாபஸ் பெற வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இபிஎஸ், ஓபிஎஸ்ஸை சந்தித்தனர். இருவரிடம் தனித்தனியாக நடத்திய ஆலோசனையில் பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றமும் கிட்டதட்ட அதை பிரதிபலிக்கும் விதமான உத்தரவையே பிறப்பித்துள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற வைக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து விசாரிக்கையில், “ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. மாறாக இரட்டை இலைக்கு கையெழுத்து போடும் உரிமை தனக்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை நிறுத்தட்டும், அவர் வெற்றி பெறட்டும் ஆனால் கையெழுத்தை தான் போட வேண்டும் என்கிறார். நேற்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் பன்னீர் செல்வத்துக்கு சாதகமாக உள்ளது.

பாஜக செய்யும் சமரச முயற்சிகளைக் கூட எடப்பாடி பழனிசாமி தட்டிக் கழித்துவிடலாம். ஆனால் இணைந்து முடிவெடுங்கள், பொதுக்குழுவைக் கூட்டுங்கள் என்று உச்ச நீதிமன்றமே சமரச முயற்சியில் இறங்கியுள்ளதை எப்படி சமாளிப்பது என்பது தான் அவர்கள் முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி. நீதிமன்ற உத்தரவுக்கு மீறி செயல்பட்டால், ஜூலை 11 பொதுக்குழு வழக்கில் சிக்கல் வருமா என்று தனது ஆதரவாளர்கள், மூத்த அமைச்சர்கள், சட்ட வல்லுநர்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

பாஜக, தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் என அனைத்தும் ஒரே குரலில் இரட்டைத் தலைமைக்கு மறைமுகமாக நிர்பந்திக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.