உலகத் தலைவர்களில் பைடன், ரிஷி சுனக்கை பின்னுக்குத் தள்ளி மோடி முதலிடம்: ஒரு சர்வே

புதுடெல்லி: ‘மார்னிங்க் கன்சல்ட்’ எனும் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், உலகில் பிரபலமான தலைவர்களில் 78 சதவீத்திற்கும் அதிகமான ஆதரவைப் பெற்று இரண்டாவது முறையாக பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் புலனாய்வு நிறுவனமான ‘மார்னிங்க் கன்சல்ட்’ நடத்திய கருத்துக் கணிப்பு ஆய்வில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

மார்னிங்க் கன்சல்ட் நிறுவனத்தின் இந்த ஆய்வு ஜனவரி 26 முதல் 31 வரை நடத்தப்பட்டது. மொத்தம் 22 நாடுகளில் உள்ள அதன் தலைவர்கள் குறித்து நடத்திய கருத்துக் கணிப்பு ஆய்வில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் வயது வந்தோரில் 78 சதவீதம் பேர் ஆதரவினைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோப்ஸ் ஒப்ரடோர் 68 சதவீதம் ஆதரவு பெற்று இரண்டாவது இடத்திலும், சுவிஸ் அதிபர் ஆலன் பெர்செட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த ஒப்புதல் மதிப்பீடுகள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள 18 வயதிற்கு மேல் உள்ளவர்களின் ஏழு நாள் மாறும் சராசரியை அடிப்படையாகக் கொண்டது. கருத்துக் கணிப்பு ஆய்வில் பங்கேற்றவர்களின் மாதிரி அளவுகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மாறுபடிருக்கும். இந்த ஆய்வின்படி இந்தியாவில் உள்ள 18 சதவீதம் பேர் மோடியை ஏற்கவில்லை.

பிரதமர் மோடியின் ஒப்புதல் மதிப்பீடு கடந்த 2020 மே மாதத்தில் 84 சதவீதமாக உச்சத்தில் இருந்தது. அவரது ஒப்புதல் மதிப்பீடு 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி 63 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.

மார்னிங்க் கன்சல்ட் சர்வதேச அளவில் தினமும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நேர்காணல்களை நடத்துகிறது. இந்த நேர்காணல்கள் அனைத்தும் ஒவ்வொரு நாட்டிலுள்ள வயது வந்தோரில் தேசிய அளவிலான பிரதிநிதிகளிடம் இணையம் வழியாக நடத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஆய்வில் பங்கேற்பவர்கள் படித்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.