ஓபிஎஸ்ஐ அழைத்து பொதுக்குழுவை கூட்டினால் மட்டுமே முழு வெற்றி!

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி இரட்டை இலை சின்னத்தைப் பெற ஓபிஎஸ்சுக்கே முழு அதிகாரம் உண்டு. எனவே, அவரை அழைத்து பொது குழுவை கூட்டினால் மட்டுமே முழு வெற்றி கிடைக்கும் என
ஓபிஎஸ்
ஆதரவாளரான உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அய்யப்பன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக பொது குழுவை கூட்டி தேர்வு செய்யப்படும் வேட்பாளரே அதிமுக சார்பில் போட்டியிட முடியும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக கூறி திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணி தேவர் சிலை அருகில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான அய்யப்பன் தலைமையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ அய்யப்பன், “இன்றைய தினம் தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு ஓபிஎஸ் வெற்றிக்கு கிடைத்த தீர்ப்பு. தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்து ஓபிஎஸ் சார்பில் வரவேற்கிறோம். பொதுக்குழுவை கூட்டி ஒரு மனதாக ஓபிஎஸ் வழிகாட்டுதலோடு வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறோம்.” என்றார்.

பொதுக்குழுவை கூட்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவின்படி, தங்களுக்கே அதிகம் பேர் ஆதரவு உள்ளதாகவும், தாங்கள் நிறுத்தும் வேட்பாளர்தான் தேர்வு செய்யப்படுவார் என இபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எம்எல்ஏ அய்யப்பன், “பொதுக்குழுவைக் கூட்டி ஓபிஎஸ் கருத்தைக் கேட்டு அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது அதுவே எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. இரட்டை இலை சின்னம் கோரி கையெழுத்திடுவதற்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் முழு அதிகாரம் ஓபிஎஸ்சுக்கே உண்டு. எனவே ஓபிஎஸ்சை அழைத்து பொதுக்குழுவை கூட்டினால் மட்டுமே முழு வெற்றி கிடைக்கும் என்பதால் அந்த தீர்ப்பை வரவேற்கிறோம்.” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.