நிதிநிலைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதிநிதிநிலை

திருச்சி: நிதிநிலைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பகுதி நேரஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பரிசீலித்து, நிச்சயம் நல்ல முடிவை மேற்கொள்வார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர்கள் எந்தப் போராட்டத்தில் ஈடுபட்டாலும், அவர்களை எட்டிப் பார்க்கக்கூட வராத ஆட்சியாளர்கள்தான் இருந்தனர். ஆனால், நாங்கள் ஆசிரியர்களின் வலியையும், வேதனையையும் அறிந்தவர்கள்.

எனவே, நிதிநிலைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். ஆசிரியர்கள் எதற்கும் வருந்த வேண்டாம். இது உங்களுக்கான ஆட்சிதான். அந்த நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றும் வகையில் முதல்வர்ஸ்டாலின் செயல்படுவார். துறை அமைச்சர் என்ற முறையில் நானும் ஆசிரியர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்.

ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில், கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது ஒரே ஒரு வார்டில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அந்த வார்டுதான் தற்போது திருச்சி தெற்கு மாவட்ட திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சவால் எங்களுக்குத் தேவைதான். நிச்சயம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவார். இவ்வாறு அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

தன்னம்பிக்கை வகுப்புகள்: இதேபோல, தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாணவர்கள் பொதுத்தேர்வுகளை தன்னம்பிக்கையுடன், பயமின்றி எழுத வேண்டும். இதற்காக அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.