1.75 லட்சம் இந்தியருக்கு ஹஜ் பயணம் செல்ல அனுமதி

புதுடெல்லி: கரோனா பரவல் காரணமாக 2 வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய முஸ்லிம் யாத்ரீகர்கள் கடந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செல்ல முடிந்தது.எனினும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 79,000 பேருக்கு மட்டுமேசவுதி அனுமதி வழங்கியது. யாத்ரீ கர்களுக்கு கரோனா தொடர்பான வழிகாட்டுதல்களையும் சவுதி அதிகாரிகள் வழங்கினர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில் வருமாறு:

ஹஜ் மேலாண்மை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஹஜ் கமிட்டிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் பலமுறை ஆலோசனை நடத்தியது. இதில் இந்தியாவுக்கான முந்தைய ஹஜ் ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் ஹஜ் தொடர்பான சவுதி அரேபியா உடனான வருடாந்திர இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ்இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தபோதும் இந்தியாவுக்கான முந்தைய ஒதுக்கீடு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 2023-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 1,75,025 யாத்ரீகர்கள் ஹஜ் யாத்திரை செல்ல முடியும்.

இவ்வாறு அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது பதிலில் கூறியுள்ளார்.

2023-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடை முறைகள் இன்னும் தொடங்கப் படவில்லை. சவுதி அதிகாரிகளால் பகிர்ந்து கொள்ளப்படும் அட்ட வணையைப் பொருத்து ஹஜ் பயணத்துக்கான முதல் யாத்ரீகர்கள் குழு மே அல்லது ஜூன் மாதத்தில் புறப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.