Madras HC: திருமாவளவன் மீது புகார் கொடுத்ததால் போலீஸ் பாதுகாப்பு தேவையா?

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது புகார் அளித்ததால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறி, போலீஸ் பாதுகாப்ப கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அளித்த மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். சட்டப் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மதுரையை சேர்ந்த பி.ராமசாமி இது தொடர்பாக மனு அளித்தார்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மதத்திற்கு எதிரான அவதூறு கருத்துகளை தெரிவித்து, நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் தூண்டுவதாக, சிதம்பரம் தொகுதி எம்.பி.-யும், விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக திருமாவளவன் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் அபாயம் இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரி, ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், விருதுநகர் மாவட்டம் அய்யம்பதி அருகே விசிக கொடிகளை வைத்திருந்த சிலர் தனது கார் மீது இரும்பு கம்பிகள் மற்றும் முட்டைகளை கொண்டு தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சாலைகிராமம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக தன் மீதும், குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடந்துள்ளதால் காவல்துறை பாதுகாப்பு கோரி சென்னை அண்ணா நகர் உதவி ஆணையாளர் மற்றும் ஜெ.ஜெ. நகர் காவல் நிலைய ஆய்வாளரிடம் அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் விண்ணப்பம் காவல்துறையின் பாதுகாப்பு குழுவில் முன்வைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவுசெய்த நீதிபதி, மனுவை முறையாக பரிசீலித்து 4 வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.