நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி

கடந்த 2017ல் கேரளாவில், தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகை ஒருவர் படப்பிடிப்புக்கு சென்று திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, அது வீடியோவாகவும் எடுக்கப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக மலையாள திரையுலகில் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்த பல்சர் சுனி என்பவன் கைது செய்யப்பட்டான்.

அதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த கடத்தல் நிகழ்வில் நடிகர் திலீப்புக்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, எட்டாவது குற்றவாளியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு அவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 83 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்த திலீப் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

அதேசமயம் முதல் குற்றவாளியான பல்சர் சுனி தனக்கு ஜாமின் வழங்குமாறு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தான். ஆனால் அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பிக்க அங்கேயும் அவனது மனு நிராகரிக்கப்பட்டது. அதேசமயம் இந்த வழக்கு விசாரணை குறிப்பிட்ட காலத்தில் நடத்தி முடிக்கப்படாவிட்டால் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்சர் சுனிக்கு ஆறுதலான ஒரு தகவலையும் வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

அதற்கேற்றார்போல இந்த வழக்கின் விசாரணை, நீதிமன்றம் சொன்னபடி குறிப்பிட்ட நாட்களில் முடியாமல், போலீசார் பலமுறை இந்த வழக்கு விசாரணை நாட்களை நீட்டிக்க கோரி அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமின் கோரி விண்ணப்பித்துள்ளான் பல்சர் சுனி. வரும் பிப்ரவரி 13ம் தேதி இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெற உள்ளது. இதில் பல்சர் சுனிக்கு ஜாமின் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.