நம்மை சுற்றி இருக்கும் பல செடிகளும் கொடிகளும் மருத்துவ குணம் நிறைந்தவை, மகத்துவம் மிக்கவை. அந்த வகையில் எளிதில் கிடைக்கக்கூடிய, நம் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய மருதாணியானது பல மருத்துவ குணங்களைக் கொண்டது.

முன்பெல்லாம் மருதாணி இலைகளைப் பறித்து, மணக்கும் அளவுக்கு அம்மிக்கல்லில் அரைத்து, சாப்பிட்ட பிறகு இரவில் கை, கால் விரல்களுக்கு தொப்பி போட்டு, தூங்கிவிடுவோம். பின்னர், கைகளைக் கழுவி, யாருக்கு நன்றாகச் சிவந்துள்ளது என ஒப்பிட்டு மகிழ்வோம். இயற்கை தந்த அருங்கொடையான இந்த மருதாணியைப் பயன்படுத்தி அழகையும், ஆரோக்கியத்தையும் பராமரிக்கலாம். டாக்டர் விகடன் இதழுக்கு அரசு சித்த மருத்துவர் ச. இளங்கோ வழங்கிய தகவல்களில் இருந்து சில இங்கே…
மருதாணியின் மருத்துவ பலன்கள்
* மருதாணி இலையை அரைத்து, உள்ளங்கை, உள்ளங்காலில் பூசிக்கொள்ளலாம். கண் எரிச்சல், கை, கால் எரிச்சல் குணமடையும்.
* மருதாணி மிகவும் குளிர்ச்சியானது, உடல்சூட்டைத் தணிக்க வல்லது. மருதாணியை பயன்படுத்தும்போது சிலருக்கு அந்தக் குளிர்ச்சி உடலுக்கு ஒவ்வாமல் போகலாம் என்பதால், பாதாம் பிசின் கலந்து பயன்படுத்தலாம்.

* மருதாணியின் இலை, பூ, பட்டை என, அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. வாதக்குடைச்சல், தலைவலி, கைகால் வலி, எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு, மருதாணி நல்ல தீர்வைத் தரும். சருமப் பிரச்னை உள்ளவர்கள் அதிகமாகப் பயன்படுத்தலாம்.
* மருதாணி இலைச்சாறு, தண்ணீர், சர்க்கரையைக் கலந்து குடித்துவந்தால், விந்து எண்ணிக்கை பெருகும்.
* நகப்புண், நகச்சுத்தி பாதிப்புகளுக்கு, மருதாணி இலைகளை அரைத்து, அதன் மேல் கட்டினால், விரைவில் குணமாகும்.
* மருதாணி இலையைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் வடிகட்டவேண்டும். இதை, ‘இலை ஊறல் குடிநீர்’ என்பர். இந்த நீரைத் தொடர்ந்து 20 நாள்கள் குடித்துவந்தால் மேகச்சொறி, படை நீங்கும். பேதி, சீதபேதி கட்டுப்படும்.

* மிகச்சிறந்த கிருமிநாசினி. காயம்பட்ட இடத்தில், ‘இலை ஊறல் நீரை’ விட்டு, ஒத்தடம் கொடுத்தால், கிருமித்தொற்று ஏற்படாது. விரைவில் குணமாகும்.
* 10 மி.லி மருதாணி இலைச்சாற்றுடன், பால் கலந்து குடித்துவந்தால் கை, கால் வலி நீங்கும்.
* மருதாணி விதையைத் தணலில் போட்டு, உடலில் புகை படும்படி இருந்தால், வெண்புள்ளிகள் மறையும்.