கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே முட்டம் பகுதியை சேர்ந்தவர் மீனவர் பனிப்பிச்சை(65). இவரது மனைவி அமலசாந்தி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அமலசாந்தி திடீரென உயிரிழந்துவிட்டார். இதனால் மனமுடைந்த பனிப்பிச்சை யாரிடமும் பேசாமல், மனைவி இறந்த துக்கத்தில் இருந்து வந்துள்ளார்.
இவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் வெகு நேரமாகியும் இவரது வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது பனிப்பிச்சை தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பனிப்பிச்சையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.