ஆன்லைன் சூதாட்டம்.. மத்திய அரசு கடுமையான சட்டத்தை இயற்றும் – மத்திய அமைச்சர்

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று, நாடாளுமன்ற மக்களவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா? ஆன்லைன் விளையாட்டு பற்றிய வரைவு விதிகளில் ஆன்லைன் சூதாட்டம் இடம் பெறாதது ஏன்? என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். மேலும் அரசியல் சட்டத்தின் எந்த அதிகாரத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வரைவு விதிகளை வெளியிட்டது? என, மணீஷ் திவாரி சாடினார்.

இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

ஏற்கனவே 19 மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சட்டங்களை இயற்றி உள்ளது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும். அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டிய பிறகு ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். ஆன்லைன் விளையாட்டு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி இளைஞர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதை அறிந்தே உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.