ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் தேர்வான சுப்மன் கில்

துபாய்,

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 3 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.

ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்தின் டேவான் கான்வே, இந்தியாவின் சுப்மன் கில், மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

இதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான 23 வயதான சுப்மன் கில்லுக்கு கடந்த மாதம் மிகச்சிறப்பாக அமைந்தது.

கில்லுக்கு ஜனவரி சிறந்த மாதம். மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அவர் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாவது போட்டியிலும் சோபிக்கவில்லை.

ஆனால் ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டி20யில் 46 ரன்கள் எடுத்து நல்ல இன்னிங்ஸ் விளையாடினார். கில் பின்னர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முறையே 70, 21 மற்றும் 116 ரன்கள் எடுத்தார்.

அதே ஆட்டத்தை நியூசிலாந்துக்கு எதிராகவும் கில் தொடர்ந்தார். முதல் ஒருநாள் போட்டியில், 208 ரன்கள் குவித்து, இரட்டை சதம் அடித்த இளம் வீரர் (ஒடிஐ) என்ற சாதனை படைத்தார்.

இதற்குப் பிறகு, இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் முறையே 40* மற்றும் 112 ரன்கள் எடுத்தார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் கில் மொத்தம் 360 ரன்கள் எடுத்தார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், பாபர் ஆசாமின் பெரிய சாதனையை (அதிக ரன்கள்) கில் சமன் செய்தார்.

ஜனவரி மாதத்தின் சிறந்த வீரர் விருதை வெல்லும் வலிமையான போட்டியாளராக கில் உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.