மது பாட்டில் பதுக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன் துருக்கி, சிரியாவுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக செலுத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  மதுபாட்டில் பதுக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய ஐகோர்ட் கிளை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பிரதமர் நிவாரண நிதியில் ரூ.25 ஆயிரம் செலுத்த உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக செல்வம் என்பவர், பட்டுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.  இந்த மனுவை நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா விசாரித்தார்.

மனுதாரர் தரப்பில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கி நாடுகளுக்கு நிவாரணம் வழங்கிடும் வகையில் குறிப்பிட்ட தொகையை அரசிடம் வழங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் வழங்கிய நீதிபதி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கி நாடுகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடும் வகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கான கணக்கில் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.  மறு உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.