ஈரோடு இடைத்தேர்தல்: வருமானவரித் துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு!

தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமானவரித் துறை 24×7 செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4ஆம் தேதி திடீரென காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி.

அதன்படி, வருகிற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த தொகுதியில் தேர்தல் கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் செலவைக் கண்காணிக்க வருமானவரி (புலனாய்வுப் பிரிவு) தலைமை இயக்குநரகத்தின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமானவரி (புலனாய்வு) தலைமை இயக்குநரகம் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. பொதுமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் தகவல்களை இந்தக் கட்டுப்பாட்டு மையம் பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 6669 / மின்னஞ்சல் – [email protected] / வாட்ஸ் அப் எண்: 94453 94453 ஆகியவற்றில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய பெருமளவிலான ரொக்கம், ஆபரணங்கள் மற்றும் இதர விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தாலோ, எடுத்துச்செல்லப்பட்டாலோ அதுபற்றிய தகவல்களை மேற்குறித்த தகவல் வழிமுறைகளை பயன்படுத்தி தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் சார்பில் மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இபிஎஸ் ஆதரவு வேட்பாளர் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார். அதிமுகவுக்கு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளன. அதேபோல், சில கட்சிகள் தேர்தலில் களம் காணவில்லை. குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் தேர்தலில் போட்டியில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்றுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற 10 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.