ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ” இன்று நாடே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு சிந்தாமல் வாக்கு செலுத்த வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்று 21 மாதங்களில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. எங்கே பார்த்தாலும் ரவுடிசம், கட்ட பஞ்சாயத்து மது விற்பனை நிகழ்ந்து வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி ஜவுளி தொழில் நிறைந்ததாக இருப்பதால் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு, இதனால் விசைத்தறி உற்பத்தியாளர்கள் தொழில் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உயர்ந்தது. ஆனால் திமுக ஆட்சியில் பொறுப்பு ஏற்றவுடனே இலவச வேட்டி சேலை வழங்கவில்லை. இதனால் விசைத்தறி கூடங்கள் வேலையிழந்து விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு விசைத்தறி தொழிலாளர்கள் மாற்று தொழிலுக்கு சென்று விட்டார்கள். இதனால் விசைத்தறி தொழில் நலிவடைந்துள்ளது. கலெக்ஷன் கரப்சன் கமிஷனில் தான் சூப்பர் முதல்வர் என ஸ்டாலின் பெயர் பெற்றுள்ளார்.
திமுகவினர் பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் அது உங்கள் பணம் தான். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தினை சீர்குலைத்து வருகிறார். திமுக பொங்கல் தொகுப்பு முறையாக வழங்கவில்லை. திமுகவினர் கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். குடும்ப ஆட்சி முடிவுகட்டுகிற வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமைய வேண்டும். மின்கட்டண உயர்வு பார்த்தாலே மக்களுக்கு சாக் அடிக்கும் நிலையில் உள்ளது. இதனால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது
சொத்து வரி உயர்வு மேலும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. குடும்ப தலைவிக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் என்கிற திமுக வாக்குறுதியை திமுக அமைச்சர்கள் வந்தால் கேட்டு வாங்கவும். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் ஓரே கட்சி அதிமுக. தாலிக்கு தங்கம், மானிய நிலையில் ஸ்கூட்டர், இலவச மடிக்கணினி வழங்குதல் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் திமுக நிறுத்தி விட்டது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் நீட் ரத்து வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை?. இனியும் திமுக மக்களை ஏமாற்ற கூடாது என்கிற பாடத்தை வாக்காளர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்” என கேட்டு கொண்டார்.