காக்கிநாடா தொழிற்சாலை விஷ வாயு தாக்குதல்; பலர் பலியானதால் பெரும் அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நடந்த விஷவாயு தாக்குதல் சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பெத்தாபுரம் பகுதி அருகே ரங்கம்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள ஆயில் டேங்கை சுத்தம் செய்ய தொழிலாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் டேங்கில் இருந்து விஷவாயு வெளியேறியுள்ளது.

விஷவாயு தாக்குதல்

இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் 7 தொழிலாளர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் எண்ணெய் தொழிற்சாலையை ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளர்கள் பலி

ஆயில் டேங்கை மொத்தம் 9 பேர் சுத்தம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் எண்ணெய் தொழிற்சாலை உரிமையாளர் அம்பாண்டி சுப்பண்ணாவை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களின் விவரங்கள் தற்போது கிடைத்துள்ளன.

கிருஷ்ணா, படேருநரசிங்கா, படேருசாகர், படேருபஞ்சு பாபு, படேருராமாராவ், படேருகட்டமுரு ஜெகதீஷ், புலிவேருபிரசாத், புலிவேரு

காலையில் நடந்த அதிர்ச்சி

ரங்கம்பேட்டையில் உள்ள எண்ணெய் தொழிற்சாலை ஓராண்டிற்கு முன்பு தொடங்கப்பட்டதாக தெரிகிறது. உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இன்று காலை 7 மணியளவில் சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

ஆழ்ந்த இரங்கல்

விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து தகவலறிந்து ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் டனெடி வனிதா அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவம் பற்றி போலீசாரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

தொடரும் விஷவாயு தாக்குதல்

இந்நிலையில் ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் அச்செநாயுடு கூறுகையில், எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த உயிரிழப்பு மாநில அரசின் தோல்வியை காட்டுகிறது. இதற்கு முன்பு எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தில் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் நடந்தது.

அதன்பிறகு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிற்சாலைகள் போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாத காரணத்தால் தான் இதுபோன்ற விபத்துகள் உண்டாகின்றன. இதற்கு அரசு உடனடியாக வினையாற்ற வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.