கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் நிலப்பாறை திருமூலநகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (45). இவர் கட்டடம் கட்டும் வேலை செய்துவந்தார். இவரின் மனைவி மேரி சைலஜா (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். ஜார்ஜ்-க்கு அவருடன் வேலை செய்து வரும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு இருந்திருக்கிறது. நாளடைவில் இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இது ஜார்ஜின் மனைவி மேரி சைலஜா-வுக்குகு தெரியவந்தது.
கணவரின் புதிய நெருக்கம் குறித்து அவரிடம் நேரடியாகவே கூறி கண்டித்திருக்கிறார் மேரி சைலஜா. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு கணவர் ஜார்ஜ் வீட்டுக்கு வந்த சமயத்தில் அந்த பெண்ணுடனான பழக்கத்தை விட்டுவிடுமாறு மேரி சைலஜா கூறி கண்டித்திருக்கிறார். இதனால் கோபமான ஜார்ஜ் ஆத்திரத்தில் மேரி சைலஜாவை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதில் மேரி சைலஜா படுகாயம் அடைந்தார்.

காயம் அடைந்த மேரி சைலஜா சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து மேரி சைலஜாவின் தாயார் ராஜம் அஞ்சுகிராமம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில், ஜார்ஜ் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேரி சைலஜா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டிருக்கிறது.

ஜார்ஜை கைதுசெய்த போலீஸார் இந்த வழக்கு சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேரி சைலஜா வின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.