புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருமண தகவல் மையம் ஒன்றில் மணமகன் தேடி வந்தார். அதற்காக, அந்த பெண் தன்னுடைய விவரங்களையும் பதிவிட்டிருந்தார்.
இந்த விவரத்தைப் பார்த்த வேலூர் மாவட்டம் காந்திநகரைச் சேர்ந்த முகமது உபேஸ், அந்த பெண்ணிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘திருமண தகவல் மையத்தில் உங்களுடைய புகைப்படத்தை பார்த்தேன். எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது.
உன்னை நேரில் சந்திக்க வேண்டும். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் சந்திக்கலாம் என்றுத் தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த அந்த பெண் கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி, சென்னை வந்த பெண் ராயப்பேட்டையில் உபேசை சந்தித்தார்.
அப்போது உபேஸ் அந்த பெண்ணிடம், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அதற்காக நகையை கொடுத்து உதவும் படியும், அவற்றை திருமணத்தின் போது திரும்ப கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண் தான் அணிந்திருந்த இருபது பவுன் நகையை உபேசிடம் கழட்டிக் கொடுத்தார். இதையடுத்து, உபேஸ் தனது செல்போனை அனைத்து விட்டார்.
இதைத் தொடர்ந்து அந்தப்பெண் உபேசை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அப்போது தான், அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையறிந்த அந்தப்பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், உபேஸ், சேலம், கோவை உள்ளிட்டபகுதியில் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து, உபேஸை ஈரோட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து, சென்னை கொண்டு வந்தனர்.
அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், உபேஸ் நீண்ட நாள் திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் விதவை பெண்களை மட்டும் குறிவைத்து திருமணம் ஆசை காட்டி நகை-பணம் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. அத்துடன் அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 1½ பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.