கரூரில் தயாரிக்கப்பட்ட பிரதமர் மோடி ஜாக்கெட்: பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதம் குறித்து பேசும்போது, பிரதமர் மோடி மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் பாட்டில் பிளாஸ்டிக் துணியால் செய்யப்பட்ட ஜாக்கெட் அணிந்திருந்தார். இந்த உடை கரூரில் அமைந்துள்ள ரெங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 28 பெட் பாட்டில்களை கொண்டு தயாரிக்கப்பட்ட துணி மூலமாக இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு 2000 ரூபாய் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த இந்திய எரிசக்தி வார விழாவில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட இந்த உடையை பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளனர். இதைத்தான் பிரதமர் மோடி பார்லிமென்ட்டுக்கு அணிந்து வந்திருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த ஜாக்கெட்டுக்கான துணியை தயாரித்த கரூரில் இயங்கிவரும் ஸ்ரீரெங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் சங்கர் நம்மிடையே விரிவாக விவரித்தார். மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்ட 9 விதமான வண்ண ஆடைகளை, ஸ்ரீரெங்கா பாலிமர்ஸ் நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு அனுப்பி இருந்தது. அதில் பிரதமருக்கு பிடித்த வண்ணத்தில் அவருக்கு பிரத்தியேகமாக ஜாக்கெட் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
இத்தகைய ஜாக்கெட் ஒன்றைத் தயாரிக்க 15 முதல் 25 பெட் பாட்டில்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார். இந்த ஆடைகளுக்கு தண்ணீர் வண்ணம் பயன்படுத்தப்படுவதில்லை. முதலில், நார் தயாரிக்கப்பட்டு, பின்னர் அது துணியாக மாற்றப்பட்டு, இறுதியாக, ஆடை தயாரிக்கப்படுகிறது. வழக்கமான வண்ணம் ஏற்றும் நடைமுறையில் இருந்து மாறுபட்டு இருப்பதோடு துணிகளின் சாயம் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிப்பதாக உள்ளது.