புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு, காமராஜர் சிலை பஸ் நிறுத்தம் அருகே பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர். இதில் இரு மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் இடைநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாங்கோட்டையை சேர்ந்த மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த மாங்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த அஜிந்திரன்(22) மற்றும் 2 மாணவர்கள் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து மோதலில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி இருதரப்பு மாணவர்களை சேர்ந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆலங்குடி-ஆதனக்கோட்டை சாலையில் நேற்றிரவு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.