மத்திய அரசு துவக்கியுள்ள, தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில், சைபர் வழக்குகளை பதிவு செய்யும் நடைமுறை குறித்து விவரிக்கும், சைபர் சட்ட வழக்கறிஞர் கார்த்திகேயன்: இன்றைக்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை, மிக மிக அதிகமாக உள்ளது.
சைபர் குற்றங்களால் பாதிக்கப்படும் பலர், தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து புகார் செய்யத் தயங்குகின்றனர்; அது தவறானது. இதற்கு தீர்வாகவே, https://cybercrime.gov.in என்ற, தேசிய சைபர் குற்றப்பிரிவு இணைய தளத்தை, மத்திய அரசு பிரத்யேகமாக துவக்கிஉள்ளது.
மாநிலங்களில், சைபர் குற்றங்களுக்கு என, தனிப்பிரிவு கிடையாது.
அனைத்து குற்றங்களையும் பதிவு செய்யும் வகையில், பொதுவான இணையதளமே உள்ளது.
அத்துடன், சைபர் குற்றப் புகார்களை காவல் நிலையங்களில் எடுத்துக் கொள்வதில்லை என்கிற, பரவலான குற்றச்சாட்டும் உள்ளது.
இதனால், சைபர் குற்றங்களின் எண்ணிக்கைக்கும், பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கைக்கும், வித்தியாசம் தொடர்ந்து இருந்து வருகிறது.
மத்திய அரசு துவக்கியுள்ள இணையதளம், சைபர் வழக்குகளுக்கான பிரத்யேக இணையதளமாகும்.
சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த இணையதளத்தில் புகார் செய்யும் போது, பெயர், மாநிலம் உள்ளிட்ட சில தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
இப்படி இணையதளத்தில் பதிவாகியுள்ள புகாரை, மத்திய தேசிய சைபர் குற்றப்பிரிவு ஆய்வு செய்து, பின் அதை அந்தந்த மாநில குற்றப் பிரிவுக்கு அனுப்பி வைக்கும். காரணம், காவல் மற்றும் குற்றங்கள் மாநில பிரிவை சேர்ந்தவையாகும்.
மத்திய பிரிவில் இருந்து மாநில பிரிவுக்கு புகார் வந்தவுடன், அதற்கான நடவடிக்கைகளை காவல் நிலைய அதிகாரிகள் எடுப்பர்.
பின், புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் பதிவு செய்யப்படும்.
இதன் வாயிலாக, நாட்டில் நடக்கும் சைபர் குற்றங்கள் சரியாக விசாரிக்கப்பட்டு, முடிவு காணப்படும் நிலை உருவாகும்; இதனால், மக்களின் பிரச்னையும் தீரும்!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்