'நாளைக்கு ஆட்சி மாறும்'.. ஈரோடு காவல்துறைக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை..! பரபரப்பான மேடை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ‘கை’ சின்னமும், அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ‘இரட்டை இலை’ சின்னமும், தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ‘முரசு’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்று வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டி அந்தந்த கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளுங்கட்சியின் பலத்தில் காங்கிரசும் – எதிர்க்கட்சி அங்கீகாரத்தில் அதிமுகவும் நேருக்கு நேராக போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி வாக்குகளை பிரிக்கும் இடத்தில் நின்றாலும் கணிசமான வாக்குகளை அள்ள களத்தில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிசாமி
காவல்துறையை எச்சரிக்கும் வகையில் பேசியது கவனம் பெற்றுள்ளது. நேற்று ஆவேசமாக பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சி தேர்தல் வரம்புகளை மீறுவதை காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்பட்டு கொண்டிருக்கிறார். நாளைக்கு ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும்.ஆனால், அதற்கு எதிராக நீங்கள் செயல்பட்டால், எதிர்வினைகளை நிச்சயமாக சந்திப்பீர்கள் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக எச்சரிக்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசினார்.

நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள தொழிலதிபர்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு சங்கங்களை சந்தித்து ஆதரவு கேட்டதாக தகவல் கசிந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மை சமூகமான செங்குந்தர் மகாஜன சங்க நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசியதாகவும் அதனை தொடர்ந்து வியாபாரிகள் சங்கம், கடை உரிமையாளர்கள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினரை தனிப்பட்ட முறையில் சந்தித்து தேர்தலுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு தேர்தல் முடிந்ததும் தேவையானதைச் செய்வதாக உறுதியளித்தார் என சொல்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.