மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2028-ல் முடிக்கப்படும் என்று, ஜப்பான் நிதி நிறுவனம் தெரிவித்து உள்ளதாக தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் இடம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “மத்திய அரசிடம் அதிமுக அரசு நிதியை கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். அது நடந்திருந்தால் தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்திருக்கும்.
ஜப்பான் பன்னாட்டு நிதியின் கீழ் தமிழகத்தில் கோவை, மதுரை, கீழ்ப்பாக்கம் போன்ற 3 இடங்களில் ரூ.1388 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் வழங்காமல், ஜப்பான் நிதி உதவி மருத்துவ துறையில் தமிழகத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தான் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பிற்கு ஜப்பான் பயணத்தின்போது நிதி கோரப்பட்டுள்ளது.
தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி வழங்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு விளக்கமளித்த ஜெய்க்கா அமைப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டமைப்புக்கு ஏப்ரல் மாதத்தில் டெண்டர் பணி நடைபெறும்.
2024 ஆண்டு கடைசியில் தான் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்கும். 2028-ல் தான் எய்ம்ஸ் பணிகள் முடிவடையும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.