திடீரென மெட்ரோ ரயில் முன் பாய்ந்த இளைஞர்.. டெல்லியில் பரபரப்பு சம்பவம்

டெல்லியில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவர், இன்று மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள மயூர் விஹார் ஃபேஸ்-1 மெட்ரோ ரயில் நிலையத்தில் அந்த நபர், இன்று பிற்பகல் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். இதனால் மெட்ரோ ரயில் சேவை அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், தற்கொலை செய்துகொண்ட நபரின் உடலை மெட்ரோவின் அடியில் இருந்து வெளியே எடுத்தனர். ஆபத்தான நிலையில், அவரது உடல் லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பலியான இளைஞர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அஜய் லக்‌ஷ்மண் பகலே என தெரியவந்துள்ளது.
image
சத்தீஸ்கர் மாநிலம் டர்க் நகரைச் சேர்ந்தவர், அஜய் லக்‌ஷ்மண் பகலே. இவர் ஐஐடி கான்பூரில் படித்து, டிஆர்டிஓவில் (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், கெயில் நிறுவனத்தில் மூத்த மேலாளராகப் பணிபுரிந்த அவர், அந்தப் பதவியிலிருந்தும் கடந்த நவம்பர் மாதம் விலகியுள்ளார். தற்போது, டெல்லி வசுந்தரா என்கிளேவில் வசித்துவந்த அவர், மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.