திருநெல்வேலி மாவட்டத்தில் கால்வாயில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பை அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள நதியுண்ணின் கால்வாய் பாலத்தின் கீழ்பகுதியில் கருப்பு நிற சட்டையும், சிவப்பு நிற வேட்டியும் அணிந்து 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் இதுகுறித்து அம்பை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கால்வாயில் இறந்த கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி உயிரிழந்தார்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.