ஓசூர் | சானமாவு பகுதியில் சுற்றிய 70 யானைகள் தேன்கனிக்கோட்டை வனத்துக்கு இடம்பெயர்வு: வனத் துறையினர் தீவிர கண்காணிப்பு

ஓசூர்: சானமாவு பகுதியில் தனித்தனி குழுக்களாக சுற்றி வந்த 80 யானைகளில் 70 யானைகளை ஒருங்கிணைத்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வனத்துறையினர் இடம் பெயரச் செய்தனர். மேலும், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா வனப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த 200-க்கும் மேற்பட்ட யானைகள் ஜவளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளில் தனித் தனிக் குழுக்களாக பிரிந்து சுற்றி வந்தன. மேலும்,

யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியையொட்டியுள்ள விளை நிலங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பீன்ஸ், தக்காளி, முட்டைகோஸ், கரும்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் இடம்பெயரச் செய்தாலும், அவை மீண்டும், மீண்டும் இப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வருவது கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதனால், விவசாயிகள், கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேன்கனிக்கோட்டையிலிருந்து ஊடே துர்கம் வழியாக சானமாவு வனப்பகுதிக்கு 60 யானைகள் இடம் பெயர்ந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் மேலும் 20 யானைகள் இடம்பெயர்ந்தன. இந்த 80 யானைகளும் தனித் தனியாகப் பிரிந்து சானமாவு பகுதியில் சுற்றி வந்தன.

இதையடுத்து, வனச்சரகர் ரவி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இதில், தனித்தனி குழுக்களாக பிரிந்திருந்த 70 யானைகளை ஒன்றிணைத்து, பட்டாசுகள் வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் இடம்பெயரச் செய்தனர். மேலும், அப்பகுதியிலிருந்து யானைகள் மீண்டும் கிராம பகுதிக்கு வராமல் தடுக்கத் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, “சானமாவு பகுதியில் மீதமுள்ள 10 யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.