கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் 2ம் நாள் பிரமோற்சவம் சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி அருள்பாலிப்பு-திரளான பக்தர்கள் தரிசனம்

திருமலை : கல்யாண  வெங்கடேஸ்வரர் கோயில் 2ம் நாள் பிரமோற்சவத்தில் சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  திருப்பதி அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பிரமோற்சவம் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை 8 மணி முதல் 9 மணி வரை நிவாச முரளி கிருஷ்ணர் அலங்காரத்தில் 5 தலை கொண்ட சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளி    பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 4 மாடவீதியில் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். பக்தர்களின்   கோலாட்டம், பஜனைகளுக்கு  மத்தியில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு தேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு  பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

 இரவு 7 மணி முதல் 8 மணி வரை சுவாமி அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்த நிகழ்ச்சியில் கோயில் சிறப்பு  துணை தலைவர் வரலட்சுமி, கண்காணிப்பாளர் செங்கல்ராயுலு, கோயில் ஆய்வாளர் கிரண்குமார்  மற்றும்  திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.