திருச்சி மாவட்டம் கூகூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் மணல் அள்ளப்படுவதாக சமூக ஆர்வலர் சண்முகம், பாரதி மோகன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூகூர் மற்றும் கோவிலடி மணல் குவாரிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து வரும் 16ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாவட்ட எஸ்பி சுஜித் குமார்,வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வழக்கு தொடர்ந்த சண்முகம், பாரதி மோகன் ஆகியோர் கூகூர் மற்றும் கோவிலடி மணல் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அவர்கள் அனைவரும் ஆய்வு செய்த பிறகு காரில் ஏற முயன்றவர்களை அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திடீரென ஆட்சியர் மற்றும் எஸ்.பி யின் காரை முற்றுகையிட்டு குவாரியில் விதிகளை மீறி மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பொழுது பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார் பொதுமக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் குவாரிகளில் ஆய்வு நடத்தியுள்ளதாகவும் அதன் அறிக்கை விரைவில் நீதிமன்றத்திற்கும், பொது மக்களுக்கு பார்வைக்கும் வெளியிடுவேன் எனவும் உறுதியளித்த பிறகு மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.