சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.5,300 கோடி முதலீடுமற்றும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசு – ரெனால்ட் நிஸான்இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக அரசுக்கும், ரெனால்ட் நிஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.5,300 கோடி முதலீடு மற்றும் 2,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலர் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு தூதரகத்தின் துணைத் தூதர் டாகா மாசாயுகி, சென்னை மற்றும் புதுச்சேரிக்கான பிரான்ஸ்துணைத் தூதர் லிஸ் டால்போட் பர்ரே, நிஸான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் கில்லாவுமா கார்டியர், நிஸான் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அஸ்வினி குப்தா, நிஸான்இந்தியா ஆபரேஷன்ஸ் தலைவர்ஃப்ராங்க் டாரஸ், ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெங்கட் மிலாபாலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரான்ஸின் ரெனால்ட் மற்றும் ஜப்பானின் நிஸான் ஆகிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் கூட்டு நிறுவனம்தான் ரெனால்ட் நிஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட். கடந்த 2008 பிப்ரவரியில், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ரெனால்ட் நிஸான் நிறுவனம், 2007-08-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில், 4.80 லட்சம் கார்கள் உற்பத்தி திறன் கொண்ட ஒரு முழுமையான ஒருங்கிணைந்த அதிநவீன பயணிகள் வாகன உற்பத்தி ஆலையை நிறுவியது. இந்த ஆலை, 2010-ம்ஆண்டில் தனது உற்பத்தியை தொடங்கியது.
இக்குழுமம் ரூ.13,000 கோடிக்குமேல் முதலீடு மேற்கொண்டுள்ளது. உற்பத்தி பிரிவில் 7,000 பேருக்கும், தொழில்நுட்பம் மற்றும் வணிக மையத்தில் 8,000 பேருக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனங்களில் 16,000 பேருக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதில்பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
தற்போதைய செயல்பாடுகளை விரிவுபடுத்துவது, அதாவது, உற்பத்தி திறன் பயன்பாட்டை 2 லட்சம் கார்களில் இருந்து 4 லட்சம் கார்களாக விரிவுபடுத்துவது மற்றும் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகிய நோக்கங்களுக்காக அடுத்த5 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய உள்ளது.
இதற்கான அரசாணை கடந்த ஜனவரியில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.5,300 கோடி முதலீடு மற்றும் 2,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அரசுக்கும், ரெனால்ட்நிஸான் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.