அசாம் மாநிலம் சில்சார் மாவட்டத்தில் உள்ள கானா கசானா என்ற உணவகத்தில் காதலர் தினமான இன்று காதலிக்காமல் சிங்கிலாக இருக்கும் நபர்களுக்கு, இலவச பிரியாணி வழங்க முன்வந்துள்ளது. இதுகுறித்து, அந்த உணவகம் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தில், காதலர் தினத்தன்று சோகமாக இருக்க வேண்டாம் என்பதற்காக இந்த ஆஃபர் என்று அந்த உணவகம் ஆறுதல் கூறியுள்ளது.
அந்த உணவகம், அனைத்து சிங்கிள்ஸ்களும் அவர்களின் “வயிறை காதலிப்பதாக” உணரும் வகையில் அரை தட்டு பிரியாணியை இலவசமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த உணவகத்தின் உரிமையாளர் சிரஞ்சீவ் கோஸ்வாமியிடம் கூறியதாவது,”ஆமாம், இங்கு வரும் சிங்கிள்ஸ்களுக்கு பிரியாணி இலவசம். காதலர் தினம் அன்று சிங்கிள்ஸ்களுக்கும் ஏதாவது ஆப்ஷன் இருக்க வேண்டும், அல்லவா” என்றார்.
ஒருவர் சிங்கிளா இருக்கிறாரா என்பதை அவர் எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் என்ற கேள்விக்கு, ஒருவர் காதலிக்கிறார்களா அல்லது சிங்கிளா என்பதை கண்டுபிடிக்க முடியாது. ஆனால் யாராவது உரிமையாளரை அணுகினால், அவர் அவர்களை பரிசீலித்து அவர்களுக்கு இலவச உணவு வழங்குவார் என்று உரிமையாளர் கூறினார்.
காதலர் தினம், செயிண்ட் வாலண்டைன் தினம் அல்லது செயிண்ட் வாலண்டைன் விழா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், அசாம் தலைநகர் கௌகாத்தியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, அங்குள்ள ஒரு உணவகம் சந்தேகத்திற்குரிய குடிமக்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு உணவு வழங்க மறுத்துள்ளது.
‘கரோலி உணவகம்’ அசாமிய உணவுகளை வழங்குவதாகக் கூறும் நிலையில், மெனுவில் கோழி, பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் பல உணவு வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், உணவகம் அதன் மெனுவின் முடிவில், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் சந்தேகத்திற்குரிய குடிமக்களுக்கும் உணவு வழங்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.