தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு எதிராக வழக்கு : நாளை விசாரணை

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற மார்ச் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சங்க உறுப்பினர்களான கமல்குமார், சீனிவாசன் உள்பட 8 தயாரிப்பாளர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தவிர, வேறு சங்கங்களில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தகுதியில்லை என சங்க விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரபட்சமான இந்த திருத்தத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்.

மேலும், தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரி நியமிக்கப்படவில்லை. உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து, வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இந்த தேர்தல் குறித்த அறிவிப்பை ரத்து செய்து, அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் “தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரியாக யாரை நியமிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை வரும் புதன்கிழமை (பிப்.15) நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்” என்று கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் பிப்.15ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனை தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் அதிகாரியாக நியமித்து, அவரும் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.