Air India Big Deal: இந்தியாவின் மிகப் பழமையான வணிகக் குழுக்களில் ஒன்றான டாடா குழுமம், இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதாவது ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்கவுள்ளது. இதில் குறுகிய அகலம் கொண்ட 210 விமானங்களும், அகலம் அதிகமாக இருக்கக்கூடிய ஏ350 ரக விமானங்கள் 40 வாங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன. ஏர்பஸ் உடனான ஒப்பந்தம் ஏர் இந்தியாவினால் 470 விமானங்களுக்கான பெரும் ஆர்டரின் ஒரு பகுதியாகும். இதில் போயிங்கிலிருந்து 220 விமானங்களுக்கான ஒப்பந்தமும் அடங்கும்.
69 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா குழுமத்திற்குத் திரும்பும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பல பெரிய மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்த வரிசையில், விமான சேவையும் விரிவுபடுத்தப்படுகிறது. இதற்காக ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்த முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏர்பஸ்-ஏர் இந்தியா ஒப்பந்த நிகழ்வில் ரத்தன் டாடா, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஏர்பஸ் தலைமை நிர்வாக அதிகாரி குய்லூம் ஃபௌரி ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துக்கொண்டனர்.
ஏர் இந்தியா மற்றும் ஏர்பஸ் இடையேயான இந்த ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த முக்கிய ஒப்பந்தத்திற்காக ஏர் இந்தியா-ஏர்பஸ் நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவும், பிரான்சும் முக்கிய பங்களிப்பை அளித்து வருவதாகத் தெரிவித்த நரேந்திர மோடி, சிவில் விமான போக்குவரத்துத் துறையில் ஏற்படும் வளர்ச்சி இந்தியாவின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களை இணைப்பதற்கும் வழி வகுக்கும் என குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஏர் இந்தியா மற்றும் ஏர்பஸ் இடையேயான இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான நட்புறவில் ஒரு மைல்கல் என்று கூறினார்.
விமானப் போக்குவரத்துத் துறையில் ஏர் இந்தியாவின் இந்த ஒப்பந்தம் நிறுவனத்தின் அந்தஸ்தை உயர்த்துவதை நிரூபிக்கும் அதே வேளையில், பயணிகளுக்கான வசதிகளில் விரிவாக்கமும் இருக்கும். இதற்குப் பிறகு, உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் இந்திய விமான நிறுவனம் மூன்றாவது பெரிய நிறுவனமாக மாறும். இந்த ஒப்பந்தத்திற்கு டாடா குழுமம் நீண்ட நாட்களாக தயாராகி வந்தது. ஒப்பந்தம் முடிந்த பிறகு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மலிவான டிக்கெட்டுகளை வழங்குவது எளிதாக இருக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது, மேலும் நிறுவனத்தின் எரிபொருள் செலவுகளில் குறிப்பிடத்தக்க குறைப்பு உள்ளது.
ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து டாடா குழுமத்தால் ஆர்டர் செய்யப்பட்ட விமானங்களில், ஏ320 ரக விமானங்கள் 140 வாங்க உள்ளதாகவும், ஏ321 நியோ விமானங்கள் 70 மற்றும் ஏ350 விமானங்கள் 40 வாங்க உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. இந்த பெரிய விரிவாக்கத்திற்குப் பிறகு, ஏர் இந்தியா உள்நாட்டு சந்தையில் இண்டிகோ ஏர்லைன்ஸுடன் போட்டியிடும் எனத் தெரிகிறது.