ரஷ்யா – உக்ரைன் போருக்கு தீர்வு காண உலக நாடுகளை இந்தியா அணிதிரட்ட முடியும்: பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வலியுறுத்தல்

புதுடெல்லி: உக்ரைன், ரஷ்யா போருக்கு தீர்வு காண இந்தியா தலைமையில் உலக நாடுகளை அணி திரட்ட முடியும் என்று பிரதமர் மோடியிடம் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடர்ந்து வரும் இந்த கடினமான சூழலில் இந்தியாவின் ஜி-20 தலைமையின் வெற்றிக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்த போருக்கு தீர்வு காண உங்கள் தலைமையின் கீழ், இந்தியா முழு உலகையும் அணிதிரட்டக்கூடிய ஒன்றாக இருக்க முடியும்.

மேலும் எங்களுக்கு முன்னால் உள்ள இந்த மிகப்பெரிய பிரச்னையை தீர்க்க எங்களுக்கு உங்களால் மட்டுமே உதவ முடியும். 250 விமானங்களை வாங்குவதற்கான ஏர்பஸ் நிறுவனத்துடனான ஏர் இந்தியா ஒப்பந்தம் இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ஆழமான  நட்புறவின் மைல்கற்களில் ஒன்றாகும்.    இந்தியாவின் சிறந்த வளர்ச்சிக்கு ஏர்பஸ் பங்களித்து வருகிறது. அந்த அடிப்படையில் ஏர் இந்தியாவுக்கு வழங்கப்படும் புதிய 250 விமானங்கள் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இருக்கும். இந்தியாவுக்கு கிடைக்கக்கூடிய அதிநவீன  தொழில்நுட்பங்களை வழங்குவதற்கும், இந்தியாவில் தயாரிக்கப்படும் கருவிகளின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் பிரான்ஸ் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.