ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது – மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு

புதுடெல்லி,

நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த இணைப்புக்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அபராதமும் விதிக்கப்பட்டது.

தற்போது பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டுமானால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். இந்த காலக்கெடுவும் அடுத்த மாதம் (மார்ச்) 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

ஏப்ரல் முதல் செல்லாது

இதுபற்றி மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதாவது இணைப்பதற்கு விலக்கு அளிக்கப்படும் வகையின் கீழ் வரும் பான்கார்டு வைத்திருப்பவர்களை தவிர மற்ற அனைவரும் 31-ந்தேதிக்குள் பான்கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்றும், இணைக்கா விட்டால் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அந்த கார்டுகள் செயல் இழக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திரும்பப்பெற முடியாது

இணைப்பதற்கான விலக்கு என்பது 1961-ம் ஆண்டின் வருமான வரிச்சட்டத்தின் கீழ் அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா போன்ற மாநிலங்களில் வசிக்கும் தனிநபர்கள், 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இந்தியர் அல்லாதோர் என குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கப்படுகிறது.

பான்கார்டு செயல் இழந்து விட்டால் அவர்களால் வருமான வரித்துறையிடம் நிலுவையில் உள்ள பணத்தை திரும்பப்பெற முடியாது, பணத்தை திரும்ப பெறக்கோரி விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.